சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை – சுகுமாரன்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1840-இல் சிறுவர்களுக்கான முதல்  இதழாக வெளிவந்த பால தீபிகை, 1901-இல் கவிமணி சிறுவர் பாடல், 1915-இல் பாரதியின் பாப்பாப் பாட்டு, 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் உதயம், 1950-இல் முதன்முதலாகச் சிறுவர் நூல் கண்காட்சி, 1957-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டி, 1957-இல் வை.கோவிந்தன் நடத்திய சிறுவர்களுக்கான முதல் தினசரி, 1972-இல்குழந்தை எழுத்தாளர்கள் யார்? எவர்?’ நூல் வெளியீடு எனப் பல தொடர் நிகழ்வுகள் நடந்துள்ளன.

குழந்தை எழுத்தாளர்கள் யார்? எவர்?’ நூலில் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை 370. 2019-இல் ஆர். வி. பதி அவர்கள் தொகுத்த நூலில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை 102. எவ்வளவு சரிவு!

பூவண்ணனின் சிறுவர் புதினமான காவேரியின் அன்புநூல் 1980-இல் அன்பின் அலைகள்என்ற பெயரில் திரைப்படமாயிற்று. 1985-இல் பெ.தூரனின் குழந்தைகள் கலைக்களஞ்சியம்சிறார் இலக்கியத்தின் ஒரு மைல் கல். 1972-இல் ஷண்முக சுப்பையாவின் சிறுவர்களுக்கான முதல் புதுக் கவிதை நூல் கண்ணன் என் தம்பி‘. (அதன் பிறகு குழந்தைகளுக்கான புதுக்கவிதை வெளிவந்ததாக நினைவில் இல்லை.) ‘கதை சொன்னவர் கதைஎன அழ.வள்ளியப்பா 25 சிறுவர் எழுத்தாளர்கள் பற்றி எழுதியுள்ளார். தம்பி ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பெரியோர்கள்எனச் சிறுவர் எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இவையெல்லாம் தமிழ் சிறார் இலக்கியத்தில் மைல் கற்கள் என்றே சொல்வேன்.

சிறார் இலக்கிய வரலாறு சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்குவதாக பூவண்ணன் தனது நூலில் கூறுகிறார். ஒரு அகநானூற்றுப் பாடலில் ஒரு தாய் நிலவைக் காட்டி குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள். ‘நிலாவே வா..வாஉனக்குப் பால் தருகிறேன்என்ற பாடலை மேற்கோள் காட்டுகிறார். மேலும் பிசிஎன்ற ஒரு வகையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது அது சிறார் இலக்கியத்தைச் சார்ந்தது என்று சொல்கிறார். பிசி என்றால் விடுகதை என்று பொருள். விடுகதை குழந்தைகளுக்குப் பிடித்தமானது. அதனால் அதை வைத்து சிறார் இலக்கியம் சங்க காலத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்கிறார். சங்க காலத்திற்குப் பின்பு இடைப்பட்ட காலத்தில்வையார் எழுதிய ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், உலக நாதர் எழுதிய உலக நீதி, அதிவீரராம பாண்டியன் எழுதிய நீதி நூல் ஆகியவற்றைக் குழந்தை இலக்கியமாக ஏற்பதாகப் பூவண்ணன் அவர்கள் குறிப்பிடுகிறார். ஆனால் அழ. வள்ளியப்பா, பெ. தூரன் இவற்றைக் குழந்தை இலக்கிய நூல்களாக ஏற்காததையும் குறிப்பிட்டு அப்பொழுது இருந்த சர்ச்சையையும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உண்மையில் 20-ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் கவிமணி தேசியம் விநாயகம் பிள்ளையோடு தான் தொடங்குகிறது. சிறார் இலக்கியத்தின் தந்தை கவிமணி தான் என்பது என் கருத்து. தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்க முடியாத குடும்பச் சூழலில் நடந்த மாற்றமும், அச்சுக் கலை உருவானதும் தான் சிறுவர் இலக்கியம் உருவாக முதன்மைக் காரணங்கள். அந்தச் சமயத்தில் பாரதி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, மின்னூர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குழந்தைகளுக்கும் படைப்புகளைக் கொடுக்கத் தொடங்கினர். 1915-இல் வெளியான பாரதியின் பாப்பாப் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை சிறார் இலக்கியத்தின் முன்னோடியாக இருக்கிறது. அடுத்து தமிழ்ப் பாட நூல்களுக்குப் பாடல் எழுதுபவர்களாக நமச்சிவாயம் முதலியார், மயிலை சிவமுத்து, மணி. திருநாவுக்கரசு, டாக்டர் மு. வரதராசன் ஆகியோர் செயல்பட்டார்கள். ஆனால் முழு வீச்சாகக் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதியவராக அழ. வள்ளியப்பா திகழ்ந்தார். 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். சிறார் இலக்கியத்தில் இயங்குவதற்கான தளமாக இந்தச் சங்கம் தமிழ்ச் சிறார் உலகில் திகழ்ந்தது. கூத்தபிரான், வாண்டு மாமா, . தெய்வசிகாமணி, சவுந்தர், மாயூரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைக்கின்றனர். ‘சிரிக்கும் பூக்கள்உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறார் பாடல்களை படைத்தார் அழ. வள்ளியப்பா. அவரைத் தொடர்ந்து அழ.வள்ளியப்பா பரம்பரை என்றே பலரும் பின்தொடரும் அளவிற்கும் அவர் உருவாக்கிய தாக்கம் இருந்தது.

1947 முதல் 1955 வரை 50-க்கும் மேற்பட்ட இதழ்கள் தமிழில் வந்தன. கண்ணன், அணில், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் இவைகள் எல்லாம் 50000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின. இதை இன்று நம்புவது கடினந் தான். இன்று இதழ்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தனிச் சுற்று இதழாகவும், இலவச இணைப்பாகவும் மட்டுமே இன்றைக்குச் சிறுவர் இதழ்கள் இருக்கின்றன. நாம் கடந்து வந்த பாதை செழிப்பாக இருந்தது என்பதையே வரலாறு சுட்டுகிறது. அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்த படைப்புகள், பாடல், சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, துப்பறியும் கதைகள் என எல்லாத் துறைகளிலும் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள் படைத்துள்ளனர். பெரியவர்களுக்கும் எழுதியவர்களான ராஜாஜி, கா.அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன், அகிலன், ஆர்.வி, ரா.கி.ரங்கராஜன், எல்லார்வி, கு.அழகிரிசாமி, அரு.ராமநாதன், துமிலன், ஜே.எம்.சாலி, ஜெயகாந்தன் ஆகியோரும் குழந்தைகளுக்கு எழுதினர். மேலும் ரா.பொன்ராசன், வி.ரா.வசந்தன், புவி வேந்தன், புவனை கலைச் செழியன், ரத்னம், தமிழ்வாணன், ஜெ.எத்திராஜன், தங்கமணி, கே.பி.நீலமணி, மாயூரன், பூரம், மாயன், வை.கோவிந்தன், நீலம், பூவை அமுதன், வெ.நல்லதம்பி, நாரா நாச்சியப்பன், பி.புலேந்திரன், லூர்து சங்கீதராஜ், மெர்வின், வானதி திருநாவுக்கரசு, எஸ்.வஜ்ரவேலு, ஆலந்தூர் மோகனரங்கன், நாகை தருமன், பெ.நா.அப்புஸ்வாமி, லெமன், எஸ்.ஆர்.ஜி, சுந்தரம், ராஜி, குழ.கதிரேசன், பி.வி.வெங்கடராமன், ஜோதிர்லதா கிரிஜா, கே.ஜெயலட்சுமி, பொன்னம்மாள், விமலா ரமணி, எஸ்.லீலா, சாந்தலட்சுமி ஆகியோரும் தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவர்களில் முக்கியமானவர்களாகும். இவர்களே கடந்து வந்த பாதையை செழுமைப் படுத்தியவர்கள்.

குழந்தைகளை மிகவும் கவரும் நாடகங்கள் அன்று செழிப்பாக இருந்தன. நாடகத்திற்காக அன்று குழந்தை எழுத்தாளர் சங்கங்கள் போட்டிகளை நடத்தின. தம்பி சீனிவாசனின் ‘தங்கக் குழந்தைகள்’, கூத்தபிரானின் அன்னை சொல் அமிர்தம்‘ – இவையெல்லாம் நாடகப் போட்டிகளில் பரிசு பெற்றன. எஸ். வி. சகஸ்ரநாமம், தி. . சண்முகம் போன்ற பிரபல நாடக ஆளுமைகள் எல்லாம் அன்றைய காலத்தில் குழந்தைகளுக்காக நாடகங்களை நடத்தியுள்ளனர். இவையெல்லாம் பாலர் அரங்கத்தில் நடந்தன. இப்போதைய கலைவாணர் அரங்கம் அன்று பாலர் அரங்கமாக இருந்தது. குழந்தைகளுக்கான நாடகங்கள், திரைப்படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு சிறுவர் இலக்கிய மாநாடும் நடைபெற்றது. பாலர் அரங்கம் குழந்தைகளின் கொண்டாட்ட அரங்கமாகவே அன்று இருந்தது. அந்த அரங்கத்தை சிறுவர் இலக்கிய செயல்பாடுகளுக்கு கொடுக்கும் படி சங்கம் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அது நிறைவேறவில்லை. சங்கம் அந்த நேரத்தில் ஏற்பாடு செய்த மாநாடுகள், புத்தக கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றில் ஆகியவற்றில் நாடகங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. இவை அனைத்துமே செழிமையான பாதையை நினைவூட்டுகின்றன.

நா. வானமாமலை, தோதாத்திரி, கல்வி. கோபாலகிருஷ்ணன், வைத்தண்ணா என மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் பொன்விழாவை நடத்தாமலேயே அதன் இறுதி மூச்சை நிறுத்தியது சோகம். 2000ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குழந்தை எழுத்தாளர் சங்கம் இல்லை. தாய் இல்லாமல் சேய் வாழும் சூழலாகவே இதை நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் மூத்த எழுத்தாளர்கள் இளையோரைப் பயிற்றுவித்தார்கள். அழ. வள்ளியப்பாவால் பயிற்றுவிக்கப்பட்ட ரேவதி, தெய்வசிகாமணி, கொ.மா.கோதண்டம், தேவி.நாச்சியப்பன் இவர்களெல்லாம் தங்கள் பங்கைத் தொடர்ந்து செய்தார்கள். செல்லகணபதி கோவையில் அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் என்ற ஒன்றை ஏற்படுத்தி குழந்தை எழுத்தாளர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு போட்டிகள் நடத்தினார். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் குழந்தைகள் நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

2000-க்குப் பிறகு குழந்தை இலக்கியத்திற்குப் பரிசளிக்கிற அமைப்புகள் நிறையத் தோன்றின. கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கவிதை உறவு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை (சிறந்த சிறுவர் நூல்களுக்குப் பரிசளிப்பது, குழந்தை எழுத்தாளர்களுக்குப் பரிசளிப்பது), 2010-இலிருந்து பால புரஸ்க்கார் விருது எனப் பல ஊக்குவிப்பு முயற்சிகள் தொடங்கின. இவைகள் எல்லாம் குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்ததால் இன்று நிறைய புதிய எழுத்தாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகம் வந்துள்ளனர். சாகித்ய அகாடமி வெளியிட்ட தொகுப்புகள் முதன்மையான நகர்வுகளாக இருக்கின்றன. குறிப்பாக, முனைவர் பூவண்ணன் 2012-இல் தொகுத்த குழந்தைப் பாடல்கள், 2017-இல் இரா. காமராசும் கிருங்கை சேதுபதியும் தொகுத்த சிறுவர் கதைகள், 2019-இல் கிருங்கை சேதுபதி தொகுத்த சிறுவர் கதைப் பாடல்கள் ஆகியவற்றைக் கூறலாம். சாகித்ய அகாதமியின் இந்தத் தொகுப்புகள் எல்லாமே புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆவணமாகவும் இருக்கின்றன.

அடுத்து, 2010-இலிருந்து புதிய எழுத்தாளர்கள் நிறைய உருவாகினர். பாடல்களில் உதயசங்கரின்,’கேளு பாப்பா கேளுபாடல் தொகுப்பு, தேவி நாச்சியப்பனின் பாடல் தொகுப்பு, கிருங்கை சேதுபதியின் சிறகு முளைத்த யானை“, தங்கப்பாவின் பொய்க்கால் குதிரை“, “சோளக் கொல்லைப் பொம்மைபோன்ற பாடல் தொகுப்புகள் 2000-க்குப் பிறகு தான் வந்தன. சிறுகதை, புதினத்தில் உதயசங்கரின் மாயக்கண்ணாடி, அண்டாமழை, விஷ்ணுபுரம் சரவணனின் வித்தைக்காரச் சிறுமி, வானத்துடன் டூ, பஞ்சுமிட்டாய் பிரபுவின் எனக்கு பிடிச்ச கலரு இப்படி நிறைய புதிய படைப்புகள் 2010-க்கு பிறகு வந்துள்ளன. சமூக பிரச்சனைகளைச் சொல்லும் படைப்புகள் கூட 2010-க்கு பிறகு வந்து நம்பிக்கை ஊட்டுகின்றன. யெஸ்.பாலபாரதியின் மரப்பாச்சி சொன்ன இரகசியம்ஓர் எடுத்துக்காட்டு. கொ.மா.கோ.இளங்கோவின் சஞ்சீவி மாமாசமூகச் சிக்கல்களைப் பேசிற்று. இவையெல்லாம் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன.

பதிப்பகங்களின் பங்கும் முதன்மையானது. 2010-க்குப் பிறகான காலத்தில் பதிப்பகங்கள் மிகவும் அக்கறையுடனும் கவனத்தடனும் இயங்குவதைப் பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக, NCBH-Nestling, பாரதி பதிப்பகத்தின் ‘Book for children’, வானம் பதிப்பகம், நிவேதிதா பதிப்பகம்ஆகியன. பழைய பதிப்பகங்கள் சிறார் இலக்கியத்தைக் கைவிட்ட நிலையில் இந்தப் புதிய பதிப்பகங்கள் பெரும் நம்பிக்கையை தருகின்றன. ஆனாலும் இன்று இருக்கும் 100+ சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதும் அளவுக்கு இதழ்கள் இல்லை என்பது கசப்பான உண்மை. இந்த நிலையைத் தளர்ச்சியாக தான் நான் பார்க்கிறேன். 1950-களில் கடந்த வந்த செழிமை தற்போது இல்லை. இந்தத் தளர்ச்சிக்குக் காரணம் என்ன? நடுத்தர வகுப்புக் குழந்தைகள் தான் சிறார் இலக்கிய வாசகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் வழிக் கல்வியை இழந்தது முக்கிய காரணம். குழந்தை இலக்கியம் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைய முடியாதது இன்னொரு காரணம். இந்தத் தளர்ச்சியிலிருந்து நாம் விடுபட வேண்டும். இங்குள்ள நூலகங்கள் குழந்தைகளுக்கானதாக மாற வேண்டும். வாசிப்பு முகாம்கள், கதை சொல்லல் போன்ற நிகழ்வுகள் அதிமாக நடக்க நாம் திட்டமிட்ட வேண்டும். குழந்தைகள் தங்களுக்கான இலக்கியத்தை படைக்க வேண்டும். அதற்குச் சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்முயற்சி செய்தால் சிறார் இலக்கியம் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதில் ஐயமில்லை.

காணொலி பதிவு :

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம். வீடியோ பதிவுகளாக காண: https://www.youtube.com/playlist?list=PLKkbYEELPUMA1SAHxQvGJHPniTRyvRaY- கட்டுரைகளுக்கு : https://www.panchumittai.com/tag/conf_2020/

Leave a comment