மழலைப் பாடல்கள் – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 6)

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழில் குழந்தைகளுக்காகப் பல துறைகளைப் பற்றியும் பாடல்கள் வெளிவந்துள்ள போதிலும், மிகச்சிறு குழந்தைகளுக்கு ஏற்ற ஓசை நயம் மிக்க பாடல்கள் Nursery Rhymes மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன.

‘Poetry is an art of the ear; not of the eye – in other words poetry is sound and not sight’

கவிதை என்பது செவியால் நுகரப்படும் கலை; கண்ணால் காணப்படும் கலை அன்று. வேறு சொற்களில் சொல்வதானால் அது ஒலிச்சித்திரம், காட்சி சித்திரம் அன்று என்கிறார் Haddow. பொதுவாகப் பெரியவர்களுக்குக் கூறப்பட்டுள்ள இவ்வுரை சின்னஞ்சிறுவருக்கு மிகவும் பொருந்தும். சிறு குழந்தைகளுக்கு ஏற்ற பாட்டு எட்டு வரி, பத்து வரிகளுக்கு மேற்படாமல் இருக்கவேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு வரியோடு ஒரு வாக்கியம் முடிந்துவிட வேண்டும். நாலு வரி, எட்டு வரிகளுக்கு மேல் ஒரு பாட்டு இருந்தால் மூச்சுப் பிடித்துப் பாடவும், நினைவில் வைத்துக் கொள்ளவும் குழந்தைகளால் இயலாது. பாட்டு வேடிக்கையாயிருந்தால், நன்கு சுவைத்துப் பாடுகின்றனர். தெரிந்த ஒரு பொருளைப் பற்றி எளிய சொல்லிலே இனிய சந்தத்திலே பாடினால், எளிதிலே மனத்தில் பதித்துக் கொண்டு விடுகின்றனர். முதலிலே வந்த சொற்றொடர்களே மீண்டும் மீண்டும் பல்லவி போல வந்தால், அவர்களது குதூகலம் அதிகமாகிறது.

சிலர், முதல் இரண்டு வரிகளை மிக எளிதாகவும் கவர்ச்சியாகவும் எழுதி விடுகின்றனர். பிறகு சுவை குன்றி விடுகிறது. சிலர் 30, 40 வரிகளில் பாடல்களை எழுதி சிறு குழந்தைகளுக்கு அலுப்பை உண்டாக்கி விடுகின்றனர்.

இவ்வளவையும் கருத்தில் கொண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எழுத வேண்டும். இது மிகவும் கடினம். கடினமாக இருந்தாலும் இந்த வயதுக் குழந்தைகளுக்குப் பாடல் எழுதுவதன் மூலமே மிகுதியான இன்பத்தை ஒரு கவிஞனால் பெற முடிகிறது.

மழலைப் பாடல்கள்

கவிமணியின் ‘தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு’ எனத் தொடங்கும் சின்னஞ்சிறுவருக் கேற்ற பாடலைப்போல் மிக எளிய இனிய பாடல்களைத் தர முயன்றவர் பலர். அத்தகையோர் சிலரது பாடல்களை இப்போது காண்போம்.

நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு(1980யிலிருந்து) முன்பு பள்ளிச் சிறுவர்கள் உற்சாகமாகப் பாடிப்பாடி மகிழ்ந்த பாடல் ஒன்று உண்டு ‘தமிழ் ஞாயிறு’ எனப் போற்றப்பெறும் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்து வரிசையைச் சொல்லிக் கொடுக்க, ஆங்கிலத்தில் இருப்பது போல் அழகான ஒரு பாடலை இயற்றினார்.

அ இதோ பார் அத்திப்பழம்
ஆ என்பவன் ஆசைப்பட்டான்
இ என்பவன் இதோ என்றான்
ஈ என்பவன் ஈ என்றான்
எனத் தொடங்கி,
ஔ என்பவன் கௌவிக் கொண்டான்
என முடியும் அப் பாடல்.

இப் பாடலை அக்காலத்துக் குழந்தைகள் ஒரு கவிதைத் தொகுப்பிலிருந்து கற்றார்களா என்றால், அதுதான் இல்லை. பள்ளிப் பாட நூலிலிருந்தே கற்றுக்கொண்டனர்.

இந்தப் பாடல் மட்டுமா, இதே போல் குழந்தைகள் தாமாக விரும்பிப் பாடும் பல அருமையான பாடல்களை இயற்றிப் பாட நூல்களில் முதல் முதலாகச் சேர்த்தவர் நமச்சிவாய முதலியார், ‘பால பாடம், முதல் சிறுவர் சிறுமியர்க்கான பல நூல்களைக் குழந்தைகளின் உளவியல் அறிந்து எழுதியவர் அவர்.

நமச்சிவாயரைப்போல் பாட நூல்களுக்காக நல்ல பல குழந்தை பாடல்களை எழுதி வெற்றி பெற்றவர்களில் மணி திருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, பெ.நா. அப்புஸ்வாமி, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையும் அகரவரிசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். ‘அம்மா இங்கே வா வா’ எனும் அப் பாடல் மிகச் சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

அம்மா, இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்,

முதல் எட்டு வரிகளும் பெற்றவளிடத்திலே பிள்ளைக்குள்ள பாசத்தை – பற்றுதலை – பிணைப்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

மாமி சுட்ட பிட்டு
மடியில் வாங்கிக் கட்டு
சீனி சர்க்கரை இட்டு
சிறிது நெய்யும் சொட்டு
உண்டு ஏப்பம் விட்டு
ஓடி வா நீ பட்டு

எதுகையும் மோனையும் இயற்கையாயமைந்த மயிலை சிவமுத்துவின் இப்பாடல் மாமி சுட்ட பிட்டினைவிட இனிமையாகவே இருக்கும். சுவையான ஒரு பொருளைப் பற்றி, மிகச்சுவையாக, விள்ளாமல் விரியாமல் சொற்களை முழுமையாக அமைத்துப் பாடியிருப்பதால், ஒருமுறை நான் சொன்னதும், குழந்தைகள் இப் பாடலை அப்படியே மழலை மொழியிலே திருப்பிச் சொல்லி விடுவார்கள்.

‘மாமி சுட்ட பிட்டு’ என்ற பாடலை போலவே இளங் குழந்தைகளுக்கான பல பாடல்களை மயிலை சிவமுத்து வின் ‘முத்துப் பாடல்கள்’ நூலில் காணலாம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பாட்டும் கதையும் எழுதி பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

பூனை வந்தது பூனை – இனிப்
போனது தயிர்ப் பானை.

சின்னஞ் சிறிய குட்டை – அதில்
ஊறும் தென்னை மட்டை.

எண்ணினால் நூறிருக்கும் எங்கள்
வீட்டு எலிகள் – அவை
இரவு பகல் பண்டங்களைத்
திருடுவதில் புலிகள்!

கொல்லையிலே கொய்யாப்பூ
கொண்டையிலே வையாப்பூ

இவ்வாறு இசை நயத்துடன் ஈற்றெதுகை வைத்துப் பாரதிதாசன் பாடியுள்ள பாடல்கள் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. கவிமணி, பாரதியார், பாரதிதாசன் ஆகிய முப்பெரும் கவிஞர்களில் சிறுவருக்காக நிறையப் பாடியவர் பாரதிதாசனே. 49 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1930ஆம் ஆண்டில் இவர் இயற்றிய ‘சிறுவர் சிறுமியர் தேசியகீதம்’ என்ற நூலிலும், ‘இளைஞர் இலக்கியம்’ என்ற நூலிலும், ‘இசையமுது’ இரு தொகுதிகளிலும் சிறுவருக்காகப் பாடியுள்ள பாடல்கள் ஏறத்தாழ 150 இருக்கும்.

இயற்கை இன்பத்திலே ஊறித் திளைத்த பாரதிதாசன் தம்முடைய ‘இளைஞர் இலக்கியம்’ என்னும் நூலில் நிலவைப் பற்றி ஒன்பது பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் சிறு குழந்தைகளுக்கு ஏற்ற பாடல் இதோ இருக்கிறது:

சொக்க வெள்ளித் தட்டு – மிகத்
தூய வெண்ணெய்ப் பிட்டு
தெற்கத்தியார் சுட்டு – நல்ல
தேங்காய்ப் பாலும்விட்டு,

வைக்கச் சொன்ன தோசை – அது
வயிர வட்ட மேசை
பக்க மீன்கள் பலவே – ஒரு
பட்டத்தரசு நிலவே!

சிறுவருக் கென்றே ‘குருவிக்கூடு’, ‘செம்படவன்’ என்ற கதைப்பாடல் நூல்களை இயற்றித்தந்த கவிஞர் குயிலின் ‘சிட்டுக்குருவி’ பற்றி மிகச் சிறுகுழந்தைகளும் பாடி மகிழும் வகையில் ஒரு பாடலை இயற்றியிருக்கிறார்.

சின்ன சின்னச் சிட்டு
சிங்கார சிட்டு
நெல்லைப் போலே மூக்கு
நேர்த்தியான நாக்கு
வட்ட சின்னக் கண்கள்
பட்டு போலே மேனி!
சிட்டைப் போலப் பறந்து
சிறுவர் வாழ வேண்டும்
சற்றும் சோம்பல் இன்றித்
தாவித் திரியவேண்டும்.

சோம்பலின்றித் தாவித்திரியும் சிறுவனைப் போலவே, தாவித் தாவிச் செல்லும் சந்த நயம் கொண்ட எளிய பாடலாக, எளிதிலே நெஞ்சில் பதியும் பாடலாக இது அமைந்துள்ளது.

விஞ்ஞான நுட்பங்களையும் தமிழிலே விளக்கிக் கூற முடியும் எனக் கடந்த 60 ஆண்டுகளாக அயராது பணியாற்றி வரும் பெ.நா. அப்புஸ்வாமி குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரும் ஈடுபாடு கொண்டு, ‘சித்திர வாசகம்’ என்னும் வரிசையில் பல பாட நூல்களை எழுதினார். ஒவ்வொரு பாட நூலிலும் சில பாடல்களை எழுதிச் சேர்த்தார். அப் பாடல்களில் ஒன்று டம்மாரம் எனும் பாடல்.

டம்மாரம் அடி டம்மாரம்
டம்டம் அடி டம்மாரம்
கோட்டை வெளியில் டம்மாரம்
கோபுர வாசலில் டம்மாரம்
குதிரை மேலே டம்மாரம்
கோயிலுக் குள்ளே டம்மாரம்
திருவிழாவில் டம்மாரம்
தேரின் மேலே டம்மாரம்
கூத்தாடி கையில் டம்மாரம்
கொட்டுக் கொட்டும் டம்மாரம்!

குழந்தைகள் கைகள் இரண்டையும் டம்மாரம் அடிப்பது போல் மேலும் கீழுமாக அசைத்துத் தலையை ஆட்டி மிக்க மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு ஏற்றவகையில் ஒலிநயம் மிக இப் பாடல் அமைந்துள்ளது.

ம.ப. பெரியசாமித்தூரன் உளவியலை நன்கு பயின்றவர், அவர் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த போது, குழந்தைகளோடு நெருங்கிப் பழகி அவர்களின் இயல்புகளை நன்கறிந்தவர்.

ஐப்பசி மாதம் பெய்கின்ற அடை மழையில் நனைகிறது ஓர் ஆட்டுக்குட்டி, அதைப் பார்த்து இரக்கப்டுகிறது ஒரு குழந்தை ‘வா வீட்டுக்குள்ளே ஓடி வா,’ என்று அன்போடு அழைக்கிறது.

ஐப்பசி மாதம் வந்தது
அடை மழையும் பேயுது!
ஆட்டுக்குட்டீ ஆட்டுக்குட்டீ
வீட்டுக்குள்ளே ஓடிவா!
சும்மா நீயும் மழையிலே
துள்ளித் துள்ளி ஓடாதே!
அம்மா கண்டால் வைவாளே
ஆட்டுக் குட்டீ ஆட்டுக் குட்டீ!

‘நான் மழையில் நனைந்தால், ‘ஐயோ, காய்ச்சல் வந்துவிடுமே, சளிப் பிடித்துக் கொள்ளுமே’ என்று அம்மா திட்டுவாள். நீ நனைவதைப் பார்த்தாலும் அம்மா சும்மா இருப்பாளா? உன்னையும் திட்டுவாளே, ஆகையால், வீட்டுக்குள்ளே ஓடி வா. விரைந்து ஓடி வா என்று வருந்தி வருந்தி அழைக்கிறது. ஆட்டுக் குட்டியிடம் குழந்தைக்குள்ள தோழமையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இப் பாட்டு. தூரனின் இந்தப் பாடல் எந்தக் குழந்தைக்கும் இனிக்கும் பாடலாக அமைந்துள்ளது.

தூரனைப் போலவே, குழந்தைகளுடன் நன்கு பழகி அவர்களின் சூழ்நிலை அறிந்து, மன நிலை உணர்ந்து பாடுகின்றனர் கவிஞர் கவிஞர் தணிகை உலகநாதன், மயிலைசிவமுத்துவின் மாணவராக விளங்கும் இவர், மயிலை சிவமுத்துப் போலவே, மிகச்சிறிய குழந்தைகளுக்கு எழுதுவதையே பெரிதும் விரும்புவர். இவரது ‘பாடும் பாப்பா’ எனும் நூலிலுள்ள ஒரு பாட்டைப் பார்ப்போம்.

பூனை பூனை வந்தது பார்
பானை பாலைக் குடித்திடவே
மி – யா – வ் – மி யா வ் – மி – யாவென்றே
வீணை போலக் கத்துது பார்.
பானையில் பால்தான் இருந்தாலும்
பூனை குடிக்கத் தருவார் யார்?
ஐயோ பாவம் அடிக்காதே
அடித்தால் பூனை துடிக்காதா?

பூனையின் மியாவ் மியாவ் சத்தம் வீணையின் நரம்பை மீட்டியது போல் இன்ப நாதமாக குழந்தையின் காதில் ஒலிக்கிறது!

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பாட்டெழுதும் போட்டியை 1961-ஆம் ஆண்டு குமுதம் நடத்தியது. அப்போட்டியில் முதல் பரிசு பெற்றது – குருவி, குருவி- என்ற சிறு பாடல். இதை எழுதிய நாரா. நாச்சியப்பன், சிறுவருக்காக ஏழு கவிதைத் தொகுதிகளை தந்துள்ளார்.

குருவி குருவி பறந்து வா!
கொஞ்சிப் பேசப் பறந்துவா!
அறுகம் புல்லைத் தூக்கிவா
அழகுக் கூடு கட்டவா!

சிறுவரோடு சேர்ந்து நீ
சிரித்திருக்கப் பறந்துவா!
குருவி குருவி பறந்துவா!
குதித்துக் குதித்துப் பறந்து வா!

கொஞ்சி பேசவும் கூடி மகிழவும் குருவியை அழைக்கிறது, சின்னஞ்சிறு குழந்தை குதித்துக் குதித்துக் குழந்தைகள் பாடுவதற்கேற்ற சந்த அமைப்புக் கொண்டது இப் பாடல்.

இரு தொகுதிகளாக வெளிவந்துள்ள ‘மலரும் உள்ளம்’ ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 16 பக்கங்கள் மிகச்சிறு குழந்தைகளை மனதில் கொண்டு பாடப் பெற்றவை.

சின்னஞ்சிறுவருக்கான பாடல்களை எழுதுவது மிகவும் கடினம் என்பதை உணர்கிறோம், சொந்தமாக எழுதுவதே கடினம் என்னும்போது, ஆங்கிலப் பாடலைத் தழுவி எழுதி, அதன் மூலம் குழந்தைகள் உள்ளத்தைக் கவர்வது அதைவிடக் கடினம்.

பெரியசாமித் தூரன் ‘Hickory, Dickory, Dock’ என்ற ஆங்கிலப் பாடலைத் தழுவி அழகியதொரு பாடலைத் தந்திருக்கிறார். நான்கு வயதுக் குழந்தை கூட விரும்பிப் பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.

டிக்டாக் கடிகாரம்
சின்னத் தட்டில் பணியாரம்

என மூலத்திலுள்ள ஓசைநயம் குறையாமல் மிக அழகாகப் பாடியுள்ளார்.

‘இளையபாரதம்,’ ‘பாப்பாப் பாட்டு’ ‘தாத்தா பாட்டு’ எனும் நூல்களைக் குழந்தைகளுக்காக இயற்றியுள்ள ரா. பொன்ராசன்,

‘Pussy cat, Pussy cat, Where have you been?’ எனத் தொடங்கும் பாடலைத் தழுவி எழுதிய ‘பூனையக்கா’ என்ற பாடல் ‘குமுதம்’ நடத்திய போட்டியில் பாராட்டுப் பரிசு பெற்றது. தமிழ்க் குழந்தைகள் விரும்பிப் பாடும் பாடலாக இது இன்று திகழ்கிறது.

பூனையக்கா பூனையக்கா
எங்கே போனீங்க?
ராணியக்கா வீடு பார்க்க
லண்டன் போனேன் நான்

ராணியக்கா வீடுபோயி
என்ன கண்டீங்க?
கோணமூஞ்சிச் சுண்டெலியைக்
கொன்று தின்றேன் நான்.

பூனையைப் ‘பூனையக்கா’ என்றும் நத்தையை ‘நத்தையார்’ என்றும் நரியை ‘நரிமாமா’ என்றும் உறவு முறை கூறிக் குழந்தைகள் அழைப்பதுண்டு. அத்தகைய மனப்போக்கை நன்கறிந்து இப் பாடலில் கையாண்டுள்ளார் பொன்ராசன்.

தொடரும்…

எழுத்தாக்கம் உதவி : நிவேதா

குறிப்பு: 1980களில் சென்னைப் பல்கலைக்கழக நினைவுச் சொற் பொழிவு சார்பாக வெளியான ” வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற புத்தகத்திலிருந்து. தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம்.

Leave a comment